புது தில்லி, ஜன.18
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 70 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.
இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து -மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,375 மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளி, கால்சியம், இரும்புச் சத்து, முடக்கு வாதம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 70 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.