சென்னை, ஜன.19
மன நல மருந்துகள் மற்றும் தூக்க மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவற்றை போதைக்காக பயன்படுத்துவதைத் தடுக்க இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பாவது:
மன நல மருந்துகள் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டுக்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில்லரை மற்றும் மொத்த மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தினர். அதில் சென்னை, திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகள் ரசீதுகள் இல்லாமல் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. புலனாய்வு பிரிவு, மருந்துகள் ஆய்வாளரால் அந்த மருந்துக் கடைக்கு வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மேலும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தின் கீழ் அந்தக் கடையின் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அதற்கும் உரிய ரசீது வழங்குவது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.