கொழும்பு, ஜன.20
இலங்கையில் கடந்தாண்டில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. விலைவாசி உயர்வு, வேலையின்மை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். இலங்கையின் முக்கிய தொழிலான சுற்றுலா தொழிலும் முடங்கி போனது. இதனால் அங்கு பொருளாதார வளர்ச்சிக்கு வழி இல்லாமல் போனது. இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன.
தற்போது கொரோனா பிரச்சினையும் குறைந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளும் செல்ல தொடங்கி உள்ளனர். 2022-ம் ஆண்டு இலங்கைக்கு 7.2 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது கொரோனா காலத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளை காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும். மேலும், இலங்கையின் காலே பகுதிக்கு தான் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வார்கள். அங்குள்ள கடை வீதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இப்போது அங்கு முன்பு போல மக்கள் கூட்டம் வருவதில்லை. இது குறித்து அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளதாவது: இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.