வாஷிங்டன், ஜன.19
அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்களுக்கு உரிய விசாக்கள் விரைவாக வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக, அமெரிக்க விசா துறை உயரதிகாரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் படிக்க, வேலை பார்க்க, சுற்றுலா செல்வதற்காக விசா கோரி காத்திருக்கும் காலம் கிட்டதட்ட மூன்றாண்டுகளாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறையின் விசா சேவை பிரிவு துணை உதவி செயலர் ஜூலி ஸ்டப்ட் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் இருந்து தொழில் மற்றும் சுற்றுலா விசா கேட்டு வருவோர், கிட்டதட்ட மூன்றாண்டு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார.
மேலும், கொரோனாவுக்குப் பின் அமெரிக்க விசா கேட்டு விண்ணப்பிப்பதில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். அதிகளவில் விண்ணப்பங்கள் வந்து உள்ளதால், அவற்றை பரிசீலனை செய்து, விசா வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தை குறைப்பதற்கான முயற்சியில் அமெரிக்க அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விசா வழங்கும் அதிகாரிகள் அதிகளவில் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளனர். இதைத் தவிர, ஜெர்மனி, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும், இந்தியர்களின் விசா விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. விசா வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.